Pages

Thursday, July 12, 2012

புது மழை

மழை வருது மழை வருது
நெல்லு வாருங்கோ
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்கோ
ஏரோட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்கோ
சும்மா திரியுற மாமனுக்கு
சூடு வையுங்கோ

என்று பாடிக்கொண்டு தெருவெங்கும் முழுதாக நனையும் வரை அனைவர் வீட்டு நெல்லையும் வாரி முறுக்கு சுட சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பூசை வாங்குவதற்குக் காரணம் இந்த மழை தான். இது யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் தான் அனைவர் வாயிலும் காதிலும். ஓட்டு விளிம்புகளில் சொட்டும் நீரை கைகளில் சேகரிப்பது திண்ணையில் இருந்துகொண்டு. இதெல்லாம் ஒரு விளையாட்டு. ஒரு வேடிக்கை. மழை நாளின் வாடிக்கை. மழைக்கு ஒதுங்கும் திண்ணைகளில் ஈரமும், குளிரும், அவ்வப்போது அடிக்கும் காற்றும் அங்கே உருவாகும் கதைகளும் அப்பப்பா இப்போது நினைத்தாலும் ஈரமாக இருக்கிறது. அந்தக் கால மழை.
Inline image 2
 மழை வரும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? துளித் துளியாகத் தோன்றாமல் கற்றை போன்று மிக வேகமாக வரும். ஒரு கற்றை மேல் மட்டும் கவனம் கொள்ளாமல் எத்தனை கற்றைகளைப் பார்க்க முடியுமோ அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, "டேய்! மழையில நனையாத... வீட்டுக்கு உள்ள வா..." அம்மாவின்  பாச மழை.
Inline image 1
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை", இது ஒளவையாரின் மூதுரை. இயற்கை அன்னைக்குத் தான் எத்தனை பிள்ளைகள். தாய் என்றால் குழந்தைக்குப் பால் தரவேண்டும் அல்லவா? மழை தாய்ப்பாலுக்கு நிகர்.  நல்லாருக்கு மட்டுமல்ல அனைவருக்காகவும் பெய்யும் மழை. தாய்ப்பால் மட்டுமல்ல இரத்தம், விந்து, உமிழ்நீர், வியர்வை அனைத்தும் மழையின் வேறு வடிவங்கள். மழை கெட்டால், இவை அனைத்தும் கெடும்.

மழைத்துளிகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும்? இவ்வுலகில் உள்ள பேக்டீரியா, வைரஸ் முதல் யானை, திமிங்கிலம் உள்ளடக்கிய அனைத்து உயிர்களின் எண்ணிக்கையின் மடங்கில் இருக்குமோ!

இயற்கை எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. நாம் நீர் நிலைகளில் என்னென்னவோ அசுத்தம் செய்தாலும், ஆவியாகி நீரை மட்டும் எடுத்து மீண்டும் குளிர்ந்து தூய்மையான நீரை மட்டும் அமிர்தமாக (elixir of life) அளிக்கிறது. ஏதோ ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலைக் கூட்டுகளால், அமில மழை பெய்தது. அவையெல்லாம் தாயின் மிரட்டலைப் போல. தாயைப் பழித்தாலும் தண்ணியைப் பழிக்காதே. காசை தண்ணீர் மாதிரி செலவு செய்யாதே என்று சொல்ல்வார்கள். காசை எப்படி வேண்டுமானால் செலவு செய்யலாம். காசு இன்னிக்கி போவும், நாளைக்கு வரும். ஆனால் தண்ணீர் அப்படியல்ல. சிக்கனம் தேவை. மாசு படுத்தக் கூடாது.

நல்லார் ஒருவர் இருந்தால் அவருக்காகப் பெய்யும் மழை என்று பேசிக்கொண்டிருந்தோம். நல்லார் இல்லாமல் கூட பெய்யும் மழை. ஆனால் சூடோமொனாஸ் சிரிங்கே (Pseudomonas Syringae) என்ற நுண்ணுயிர் பேக்டீரியா  இல்லாமல் பெய்யாது மழை. சமீபத்திய கண்டுபிடிப்பு. இந்த நல்லவரை ஆலங்கட்டிகளின் நடுவிலிருந்து கண்டெடுத்திருக்கிரார்கள். காற்றுடன் மேகம் வரை சென்று, நீராவியை மிக வேகமாக ஒன்று கூட்டி உறைய வைக்கும் (நீர் உறையும் வெப்ப நிலையை விட அதிகமான வெப்ப நிலையிலேயே). இதே போல இந்த சிரிங்கே, தாவரங்களின் பகுதிகளை உறைய வைத்து தாவர செல்களைக் கொல்லும் நல்லவர். முன்பு எழுதிய மழை பதிவில், இமயமலை பள்ளத்தாக்கில் நடந்த மனிதக்கூட்டத்தின் மர்ம சாவுக்கும் இந்த நல்லவர் தான் காரணம்.

மண்ணிலும் இருந்து, விண்ணுக்கும் சென்று, மீண்டும் மண்ணை நோக்கி வரும் மழையுடன் பயணிக்கும் சூடோமொனாஸ் சிரிங்கேவாக மாற ஆசை.

Monday, July 9, 2012

உறைந்த இரத்தம்............ பிரிந்த உயிர்..............

சமீபத்தில் என் மனதை மிகவும் வருத்தமடையச் செய்த சம்பவம், என் நண்பரின் அகால மரணம். அதன் காரணம் இரத்த உறைவு (blood clot). இரத்த உறைவு மரணத்திற்குக் காரணமாகுமா? இதுவரை எனக்கும் தெரியாது. மருத்துவர்கள் இரத்த உறைவின் விளைவுகளை எடுத்துரைக்காதது மரணத்திற்கு இட்டுச்சென்றது.

நண்பர்களே, நம் உடல்தான் நம் பிரதான சொத்து. "போகும் போது என்ன கொண்டு போகப்போகிறோம்" என்று சொல்லுவார்கள். ஆனால் போகும்வரை நமது உடல்தான் நம்முடன் இருக்கும்.உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். என்னதான் கையெழுத்து மட்டுமே போடும் வேலையாயிருந்தாலும் உங்கள் கை அவசியம், கண் பார்வை முக்கியம். வெளியுருப்புகளை விட உள்ளுறுப்புகள் மிக மிக பாதுகாக்க வேண்டியவை. ஆசைகள் அதிகமிருக்கும் அதற்கெல்லாம் ஈடுகொடுக்க உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும்.

நண்பர் Dr. ராஜாராம் பாட்டீல் (32), வேளாண் வேதிப்பொருட்களில் முனைவர். இயற்கை விவசாய சான்றளிக்கும் நிறுவனத்தில் கள ஆய்வாளர். கள ஆய்வுகளுக்குச் செல்ல அடிக்கடி பயணிப்பது வழக்கம். அவுரங்கபாத்தில் என் உடன் பணிபுரிந்தார். நாங்கள் இருவரும் ஒரே அறை நண்பர்கள். பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றிருக்கிறோம். நல்ல சிந்தனையாளர், ஆரோக்கியமானவர், நோய் எதுவும் இல்லை. கடந்த மே மாதத்தில் ஒரு நாள், பேருந்தின் உள்ளேயே தடுமாறி விழுந்ததில் கால முட்டி எலும்பில் சிறு முறிவு (minor fracture), உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி scan செய்ததில், இரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறதென்றும் உறந்த இரத்தத்தை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது.
 
ஆரோக்கியமான மனிதருக்கு இரத்தம் உறைதல் மிக மிக  தேவையான ஒன்று. ஏதேனும், சிராய்ப்போ அல்லது வெட்டுப்பட்டலோ, வெட்டுப்பட்ட இடத்தில் இரத்தம் அதிகம் வெளியேறாமல் தடுக்கும், உடலின் ஒரு தற்காப்புச் செயல்பாடு. உடலுக்கு வெளியே இரத்தம் உறையும் செயல்பாடு எவ்வளவு மகத்தானதோ அதே அளவு ஆபத்தானது உடலுக்கு உள்ளே நடக்கும் இரத்த உறைவு. உள்காயங்களில் உடலின் உள்ளே இரத்த உறைவு நடக்கும் அபாயம் அதிகம். வீக்கம், தோலின் நிறம் மாறுதல் போன்ற வெளிக்குறிப்புகளும் பல நேரங்களில் இருக்காது. ஆனால் வலி இருக்கும். உறைந்த இரத்தம் அதே இடத்தில் இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், உறைந்த இரத்தம் ஓடும் இரத்ததில் கலந்து ஓட ஆரம்பித்து இதயத்துக்கோ, நுரைஈரலுக்கோ சென்றால்...........இரத்தக் குழாயில், மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி திடீர் மாரடைப்பிற்குக் காரணமாகும். உயிரிழப்பை ஏற்படுத்தும்.

நண்பர் அறுவை சிகிச்சைக்கு முன்பு ஓய்வுக்கால்த்தில் காலை மடக்கக்கூடாது, நடக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு ஓய்விலிருந்தார்.  ஆனால் சிறு இரத்த உறைவு மரணம் வரை கொண்டு செல்லும் என்று தெரியாது. வலி குறைய ஆரம்பித்து அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாள் இருந்தது. வீட்டின் உள்ளே மட்டுமே நடந்தார். ஞாயிறு அன்று மாலை நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது, உடனடியாக கிராமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ஒரு  மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் அடுத்தடுத்த மாரடைப்பு (multiple attack) ஏற்பட்டது. மருத்துவர் பரிசோதித்து நண்பர் இறந்து விட்டதாக அறிவித்தார். மூன்று நிமிடத்திற்கு முன் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றார். உடலின் உள்ளே இரத்தம் உறைந்து மரணத்தை ஏற்படுத்தும் இந்த நிலைக்கு deep vein thrombosis, pulmonary embolism என்றும் சொன்னார்கள். எந்தப் பெயராக இருந்தால் என்ன? இது மீட்க முடியாத இழப்பல்லவா?

மிகச்சிறிய இந்த இரத்த உறைவு உயிரையே எடுக்கும் என்ற அறியாமையும், புரியவைக்காத மருத்துவர்களையும் எண்ணி வருந்துகிறேன். இதுபோன்று நம் நெருங்கியவர்களுக்கு ஏற்படாமல் அறிவுரை கூறி தகுந்த நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால், 100 சதவீதம் மரணம் ஏற்படாமல் தடுத்துவிடலாம். சிகிச்சை முறைகளும் எளிதானதுதான். தடுக்க முடிந்த உயிரிழப்பு இன்னுமொரு முறையும் நிகழக்கூடாது.
நண்பரின் ஆத்மா அமைதியடையட்டும்.