Pages

Saturday, September 28, 2013

மருத்துவத்தால் பாதிக்கிறதா மக்கள்நலம்?



உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது. 


திருக்குறளின் மருந்து என்ற அதிகாரத்தின் பத்தில் ஏழு குறட்பாக்கள் உணவைப் பற்றித்தான் உள்ளன. மூன்றுதான் மருத்துவம், மருத்துவர் பற்றியும் உள்ளது.

உணவு மிஞ்சினாலும் குறைந்தாலும், ஒவ்வாத உணவைத் தவிர்த்து பசியின் தன்மைக்கேற்ப செரித்தபின் அளவறிந்து உண்டால் மருந்து தேவைப்படாது.  நீண்ட காலம் வாழலாம். நோயில்லை, இன்பம் என்று ஏழு குறட்பாக்களிலும்............... நோயாளியின் வயது, தன்மை, நேரம்; நோயின் தன்மை அறிந்து ஆராய்ந்து சிகிச்சையும் நோய் வராமல் காக்கும் வழிகளையும் கற்றவன் மருத்துவன். நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவம், மருந்து கொடுப்பவன் எல்லாம் உள்ளடக்கியது மருத்துவமுறை என்று மூன்று குறட்பாக்களிலும் கூறியுள்ளார்.

வள்ளுவன் காலம் முதற்கொண்டு மருத்துவத் தொழிலையும், மருத்துவர்களையும் கடவுளுக்கு நிகராகப் போற்றி வந்துள்ளனர். மருத்துவர்கள் செய்வது அறத்தொழில் என்பதில் எந்த மாறுபாடான கருத்தும் இன்றி மருத்துவம்(ர்), மருத்துவத்துறையில் நம் நாட்டின் நிலைமை சிந்திக்கத் தூண்டியது. அவற்றை இங்கு பகிர்கிறேன். 

இந்தியா மருத்துவத் துறையில் தன் பொறுப்பிலிருந்து பெரிதும் விலகி GDPயில் மருத்துவத்திற்கு அரசாங்கம் செலவிடும் அளவு 1.1% மட்டுமே.  இது மற்ற வளரும் நாடுகளின் அளவைக் காட்டிலும் மிகவும் குறைவு. தனியார் மயத்தால் நகரங்களில் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகமாக உள்ளது. கிராமங்களில் பள்ளிகளின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளதே. மருத்துவர் மக்கள்விகிதம் நம் நாட்டில் 1000 பேருக்கு 0.65 மருத்துவர்கள். அதாவது 10,769 பேருக்கு 7 மருத்துவர்கள் உள்ளனர். இதே விகிதத்தின் உலக சராசரி 1000 பேருக்கு 1.2 மருத்துவர்கள். இந்தக் கணக்கு கூட இந்தியாவின் மொத்தம் ஏழு லட்சம் மருத்துவர்களுக்கும் மக்கள்தொகைக்குமான விகிதம் தான். இந்தியாவின் கிராமங்களில் இந்த விகிதம், நகரங்களை விட 6 மடங்கு குறைவு (பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்). 

இந்திய ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் வார்த்தைகளில் பார்க்க.


நகரங்களில் கூட மருத்துவமனைகளின் எண்ணிக்கை தான் அதிகமே ஒழிய மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஒரே மருத்துவர் பல மருத்துவமனைகளிலும் (consultant, specialist, etc) பணியாற்றி வருகிறார் தன் சொந்த கிளினிக்கையும் சேர்த்து. நம் நாட்டின் மருத்துவர்கள் தூங்கும் நேரம்,  உண்ணும நேரம் தவிர அனைத்து நேரங்களிலும் மருத்துவப்பணிதான் செய்கிறார்கள். ஏன்? 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை. இதனால் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான பரிசோதனை செய்ய நேரம் இருக்காது, அதாவது நோயின் அறிகுறியை சரியாக கணிக்காமலே தவறான சிகிச்சைக்கு வாய்ப்புள்ளது. ஒரே நோயின் தீவிரம்  ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். ஒரே சிகிச்சை பலனளிக்காது. ஒரே மருந்து அளவு தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமான பணிச்சுமையால் மருத்துவப் படிப்புடன் மருத்துவத் துறையின் புதிய விஷயங்களின், ஆராய்ச்சிகளின்  update இல்லாமல் போய் விடுகிறது. மருத்துவர்களின் அறிவு ஒரு வாரத்திற்கு இவ்வளவு மருந்துகள் விற்க வேண்டுமென்ற விற்பனை இலக்கு/லாப நோக்கத்தோடு உள்ள மெடிக்கல் ரெப்பிரசண்டுகளின் வாயிலாகவே நிகழ்கிறது. மருத்துவர்களின் சிறு பேனா முதல் கிளினிக்கில் உள்ள எல்சிடி டிவி வரை மருந்துக் கம்பெனிகள் அளித்த அன்பளிப்புகளாகவே இருக்கும். இவ்வளவு மருந்தும் தேவையில்லாமல் நோயாளிகளின் மேல் திணிக்கப்படுவதாக உங்களுக்கும் தோன்றுகிறதா?
இதைவிட மோசமான இன்னொரு உண்மை. ஒரு மருத்துவருக்கு 6 செவிலியர்கள் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு மருத்துவருக்கு ஒரு செவிலியர் தான் உள்ளார். மொத்தம் 24 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை. 35000 மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தான் உள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை. ஒரு வருடத்திற்கு நாட்டிலுள்ள 350 மருத்துவக் கல்லூரிகளில் 45,000 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள். இதே நிலையில் மருத்துவர்கள் வெளிவந்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டு தான் செல்லும். இதனால் தான் எந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றாலும் காத்திருக்க வேண்டியுள்ளது, கிராமத்தினர் பல கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டியுள்ளது. இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மக்களை சுரண்டிக்கொண்டுள்ளதாக நம்புகிறீர்களா?

நீதிபதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தன் சொத்துக் கணக்கை காட்ட வேண்டிய சட்ட நிர்பந்தங்கள் உள்ளன. இருந்தபோதிலும் நாட்டில் கருப்புப்பணம் அதிகமாவதற்குக் காரணமாக உள்ளனர். தொழிலதிபர்களும் தணிக்கைத் துறையின் கண்ணை மறைத்து கறுப்புப்பணத்தை அதிகமாக்குகின்றனர். அரசாங்க மருத்துவர்கள், தன் கிளினிக்கின் மூலமாக கறுப்புப்பணம் உருவாக்குவதில் பெரும் பங்கு உள்ளது. மருத்துவர்களின் கிளினிக்குகளும் வணிக ரீதியானது, தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறதா? இதுபோன்ற கிளினிக்குகளில் டோக்கன் போட ஆளிருக்கிறது. பில் போட ஆளிருக்கிறதா?

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதிலும் கவலை அளிக்கும் விஷயம் கல்லூரிகளின் அனுமதியில் ஊழல் நடப்பது.

கிராமங்களில் மருத்துவர் மக்கள் விகித குறைபாட்டைப் தற்காலிகமாகப் போக்க அரசாங்க மருத்துவர்களை வாரத்தில் இரண்டு நாள் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ சேவை செய்யப் பணிக்கலாம். தனியார் மருத்துவர்களும் இந்த கிராம சேவைக்கு பதிவு செய்து கொண்டு சேவை செய்த நாள்களுக்கு அரசிடமிருந்து ஊதியம் பெறும்படி செய்யலாம்.

நாட்டின் ஆரோக்கியம் மக்கள் ஆரோக்கியமே. மக்களின் ஆரோக்கியத்திற்கு மருத்துவத்துறை மட்டுமே முழு காரணமல்ல. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர், மழைநீர் வடிகால் வாரியம், கழிவு நீர், கழிவு மேலாண்மை, துப்புறவுத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகளின் குறைகளே மருத்துவத்துறைக்கு பெரும் சுமையை அளித்துள்ளது என்று தோன்றுகிறது.

டாடி  எனக்கு ஒரு டவுட்டு ?
M. B. B. S. என்றால் Bachelor of Medicine, Bachelor of Surgery தானே, சுருக்கமாக எழுதவேண்டுமென்றால் B. M. M. S. என்பதுதான் சரி. முதுநிலைப் படிப்பைப் போல தோன்றுவதற்காக இப்படி எழுத்தை மாற்றி எழுதியதுமட்டுமில்லாமல் முனைவர்களை அழைப்பது போல் Dr. என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மருத்துவத்துறை மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இல்லாமல் போன காரணத்தால் போலி மருத்துவர்கள் தோன்றக் காரணமாகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பதின் அடிப்படையே மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு நாட்டின் வருவாயை மக்கள் நலனுக்காக  திட்டமிடுதல்தானே. மத்திய, மாநில திட்டக் கமிஷன்களின் திட்டமிடுதல் குறைபாடுகளின் விளைவா இது.

இப்போதெல்லாம் எளிமையாக நோய்க்குறிப்புகளைக் கண்டறியும் முறைகளை (கண்ணின் தன்மை, நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தல், நாடித் துடிப்பைப் பார்த்தல், உணவு, செரிமானம் பற்றி விசாரித்தல் போன்றவை)   மருத்துவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. நோயாளியை சந்தித்த உடனே, ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை, MRI, CT scan, biopsy, endoscopy, tradmilltest, என்று என்னென்ன தன் கிளினிக்கில் அல்லது தன் பார்ட்னர் ஸ்கேன் சென்டரில் உள்ளதோ அந்த பரிசோதனைகளைப் பரிந்துரைக்கிறார். இவையெல்லாம் நோயாளிக்கு ஒரு திகிலை ஏற்படுத்துகிறது மற்றும் பரிசோதனைகளின் முடிவுகள் புரியும்படி இல்லை. மருத்துவர்கள் புரியவைப்பதும் இல்லை. நோயாளிகளை நோயைப் பற்றி தெளிவாகப் புரியவைக்காமல் மருத்துவர்களைச் சார்ந்தே இருப்பது போன்ற ஒரு நிலையை வேண்டுமென்றே உருவாக்குகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.


பாதுகாப்பான இரத்த அழுத்தம் (BP normal) என்பது 160/100 என்பதாக இருந்தது. 140/90 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் 120/80 என்று 2003இல் WHO ஆல் குறைக்கப்பட்டது. ஏன்? உலகத்தின் பாதி மக்கள் தொகையை இரத்த அழுத்த நோயாளிகளாக வரையறுத்து தன் மருந்துக் கம்பெனியின் மருந்துகளுக்கான நீடித்த வியாபார நோக்கமன்றி வேறு என்ன இருக்க முடியும். இதனால் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப நிலை (pre hypertension, pre hypotension) நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இதே போல 1997ல் இரத்தத்தில் சர்க்கரை அளவையும் (fasting blood glucose level) 140 mg/dL  இல் இருந்து 126/ mg/dL ஆக குறைத்தது அமெரிக்க டையபெடிஸ் அசோசியேசன். இதற்கும் அதே வியாபார காரணம்தான்.  இந்த அளவுகள் என்பது அதிக மக்களின் சர்க்கரை/BPஅளவு எந்த அளவு உள்ளது என்று கணிக்கப்பட்ட பின் வரையறுக்கப்பட்டது.


முதல் வரி மீண்டும் “உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது”

இது போன்ற பல சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கின்றனவா?

References

  1. http://www.who.int/countryfocus/cooperation_strategy/ccsbrief_ind_en.pdf
  2. http://www.thirukkural.com/2009/02/blog-post_4289.html
  3. Subba, Reddy DV, and K. Palanichamy. "Health, disease, physician and medicine in Thirukkural." Bulletin of the Institute of Medicine (Hyderabad) 2 (1972): 141.
  4. http://www.tenet.res.in/Publications/Presentations/zip/Healthcare_in_India.pdf
  5. Deo, M. G. "Doctor population ratio for India-The reality." The Indian journal of medical research 137.4 (2013): 632. http://www.ijmr.org.in/article.asp?issn=0971-5916;year=2013;volume=137;issue=4;spage=632;epage=635;aulast=Deo
  6. http://articles.timesofindia.indiatimes.com/2010-05-12/india/28306471_1_t-dileep-kumar-nursing-colleges-countries
  7. http://www.cbhidghs.nic.in
  8. CHATTOPADHYAY, SUBRATA. "Corruption in healthcare and medicine: Why should physicians and bioethicists care and what should they do?." Indian journal of medical ethics 10.3 (2013). http://ijme.in/213chm153.html
  9. Mendelsohn, Robert S. Confessions of a medical heretic. Lebanon, IN: Warner Books, 1980.
  10. மார்க்ஸ் அ. நமது மருத்துவ நலப் பிரச்சனைகள். பொள்ளாச்சி, இந்தியா: எதிர் வெளியீடு, 2010
  11. http://www.vinavu.com/2013/08/19/a-doctor-exposes-unholy-hospital-practices/
  12. http://seattletimes.com/html/health/sick1.html 
  13. http://www.obesitymyths.com/myth8.2.htm





Friday, September 6, 2013

தாடி


தாடி என்பது காதல் தோல்விக்கான குறியீடு எனும் குறுகிய எண்ணப்போக்கு வேண்டாம். தாடிக்கென்று மிகப்பெரிய வரலாறே உள்ளது. வரலாற்றையே உருவாக்கியதும் உருமாற்றியதும் தாடிக்காரர்கள்தான்.
 


தாடி ஒருவேளை காதலித்த இருவரின் பிரிவை குறிக்கும் என்றால், எனக்குள் சில கேள்விகள் எழுகிறது, மார்க்சியத்தை உலகிற்குத் தந்த மாபெரும் மனிதன் கார்ல் மார்க்ஸ் காதலித்து மணந்த தன் மனைவி ஜெனீயுடன் வாழ்ந்த போதும், மனைவி இறந்த போதும் தாடியுடன் தான் வாழ்ந்தார். கிட்டத்தட்ட எல்லா மதத்தவர்களுமே சீக்கியர், இசுலாமியர்(முகமது நபி), கிறிஸ்தவர்(ஏசு, கிருஸ்துமஸ் தாத்தா), இந்து(சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள்), ஏன் தாடி வைத்து இருந்தார்கள்? இருகிறார்கள்? அனைவரும் காதலில் தோற்றவர்களா?  சிவன், இவரு பேரு சடா முடி, ஆனா தலையில மட்டும் முடி, தாடி சுத்தமா மழிச்சி இருப்பாரு (எல்லாம் ஒவியனோட தவறான கற்பனை). மதம், கடவுள், தீண்டாமை இல்லை என்ற பெரியாரும், கம்யுனிச வாதியுமான கார்ல் மார்க்சும் தாடியுடனேயே காணப்பட்டனர்.  கம்யுனிசம் ஒரு உணர்வு, இடத்துக்கு இடம் மாறுபடும். கிரேக்கத்தை ஆட்டுவித்த தத்துவ மேதை சாக்ரடீஸ், ப்ளுடோ, மற்றும் நான் ரசித்த போராளி, பார்க்க துடிக்கும் தலைவர் முறையே, வல்லரசு ஆதிக்கத்தில இருந்து கியுபாவை வென்று எடுத்த சே.., பிடல்காஸ்ட்ரோ ஆகியோரும், இன்னும் பல புதுமைகளையும், பல கண்டுபிடிப்புகளையும் தந்தும், தந்து கொண்டு இருக்கிற, நோபல் பரிசை உலகுக்கு அறிமுகம் செய்த அல்பிரட் நோபல் மற்றும் ஆராய்ச்சியாளர்களும், உலகத்தில் வாழும் அனைத்து உயிரினத்தின் பரிணாமத்தினை ஐந்து வருடம் கடல் மார்கமாக உலகை சுற்றி ஆராய்ந்து உயிரினங்களின் தோற்றம் ஆய்வு கட்டுரையை உலகத்திற்கு தந்த சார்லஸ் டார்வின், ஆகியோரும் தாடியுடனேயே காணப்பட்டனர்.
  
செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மகனாக பிறந்த ஆப்ரகாம் லிங்கன், ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து, தனது அரசியல் வாழ்வில் முதன்முதலில் வெற்றிபெற்றது ஒரு சிறுமியின் வேண்டுகோளுக்கிணங்க தனது பருவந்த, ஒடுக்கத்துடன் காணப்பட்ட, பாவப்பட்ட முகத்தில் தாடி வைத்தபின்பே அமெரிக்க அதிபரானார் என்பது வரலாறு.  காரல் மார்க்ஸ் நாடு கடத்த பட்ட போது, பலபோழுது இரவு நேரத்தில் வீதியிலும், குளிரிலும், ஒளிந்தும், மறைந்து திரிந்து மூலதனத்தை உலகிற்கு தந்தார், சே., ஆஸ்துமாவால் பாதிப்புற்று கொரில்லா தாக்குதலுக்கு முற்படும் போதும் மிக அடர்ந்த காட்டில் சுற்றித்திரிய முகத்தில் முடி  தேவை பட்டு இருக்கலாம், இதுதான் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதே !!! (thermoregulation)
இன்னும்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 1031

மசானபு ஃபுகோகா, நம்மாழ்வார் போன்ற வேளாண் விஞ்ஞானிகளும் தாடியுடனேயே காணப்பட்டனர்.
  
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவன் வாழ்ந்த காலகட்டத்தில்  குழந்தைத் திருமணம் இருந்திருக்க கூடும், இருந்திருந்தால் திருவள்ளுவரும் வாசுகி அம்மையாரூம் பால்ய பருவத்திலேயே சேர்ந்து வாழ்ந்து இருப்பார்கள், ஆக வள்ளுவனுக்கும் காதல் மலர்ந்தது திருமணத்திற்கு பிறகு பருவ வயது எட்டியதும். அங்கு தோல்வியும் இல்லை அப்படி அவருக்கு மற்ற யாரோடும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பும் இல்லை!!!


பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோரர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு – 149  

இது இவரு எழுதினது அப்ப ஒழுக்கமாகத்தான் இருந்திருப்பாரு. அது மட்டும் அல்ல, தமிழர்கள் தமிழர்களாய் வாழ்ந்த காலம் அது. காதல் என்னவென்று உலகுக்கு சொல்லும் இன்றைய  கேவல சினி(மாக்கள்), இப்ப இருக்கறமாதிரி விண்ணைத்தாண்டி வருவாயா?,.. ஆதலினால் காதல் செய்வீர்!.. தமிழர்களை முன் நடத்தி செல்லும் காலம் இல்லை.

ஷாஜகான் பல மனைவியுடன் வாழ்ந்த போதும் மும்தாஜின் இறப்பிற்கு பிறகும் தாடியுடனேயே காணப்பட்டார், மும்தாஜ் திருமணமான 19 வயதிலிருந்து 40 வயதுவரை 14 குழந்தையைப் பெற்றெடுத்து 14 வது பிரசவத்தில் ரத்தப்போக்கால் இறந்து போனாள். இது காதலே இல்லை. ஷாஜகானுக்கு இது வெற்றியே ஒழிய தோல்வியில்லை பிறகு ஏன் இந்த தாடி? அப்புறம் ஒசாமா பின்லேடன்?.

இந்த மயிரூ,. குளிரு நேரத்தில் மனிதனை குளிரில் இருந்து காப்பாற்றி தட்ப வெப்பத்தினை கட்டுபடுத்தும் ஈரத்தினை தக்க வைக்கும் தன்மை கொண்டது (thermoregulation), கற்காலமனிதன் தனது வாழ்நாளில் பலமணிநேரத்தை இரை தேடலிலேயே கழித்தான், இவன்தான் வேட்டையாடுவான் தனக்கும், தன்னை சார்ந்த துணைக்கும். ஆதலால் உடம்பில் முடியுடனும், தாடியுடனும்தான் திரிந்து வாழ்ந்து இருப்பான். அப்ப, குளிரிலிருந்து தப்ப!!! 
 
இது காதல் தோல்வியால் ஒரு ஆண் முகத்தில் தாடி வச்சிகிட்டு திரியிறான்னு வச்சிக்கிடா, தோல்வி என்பது எதோ ஆண்களுக்குத்தானா? பெண்களுக்கு காதல் தோல்வி என்பது இல்லையா? இல்லை ஏற்படாமல் இருக்க தாடியை இயற்கையே தவிர்த்தா? எல்லாம் அன்றோஜென் (Androgenic Hormone) சேய்யும் வேலைமா!!! வேலை!!! ஆண்மையின் அடையாளம் !!! பருவ வயதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலில் சில மாற்றம் நிகழும் இது இயற்கை, இங்க ஒன்னும் காதலும் இல்ல கத்திரிகாயும் இல்ல.

சபரி மலை சாமி தினம் ரெண்டு வேளை அதுவும் கார்த்திகை மார்கழியில் குளி(ரி)யல், அந்த சாமி மேற்குதொடர்ச்சி மலைமேல இருக்கு, அத பாக்க போனா மழைகாலத்தில் குளிர் வாட்டி எடுக்கும் அதுக்காக தாடி, தலையில் கனத்த மயிர வளர்த்தால் உடம்பின் தட்பவெப்பத்தை தக்க வைக்க உதவும். திருமணம் ஆனவங்க தனியா படுத்தா, உடம்பில் எதிர்ப்பு சக்தி இருக்கும். செருப்பு போடாம பழகினா மலையில் ஏறுவதற்கு பழகிபோயுரும், மத்த கலர விட  கருப்புகலரு துணி சீக்கிரம் காயும் அது அறிவியல் சாமியோ!!! சாமியோ!!!  சரணம் !!!!!
 
சவரம் செய்யாதிருந்தால், மனித தோல் பகுதியை புறஊதாகதிர் தாக்குதலில் இருந்து காப்பற்றிக் கொள்ளவும், இன்று உள்ள மாசுபட்ட காற்றில் இருந்து மிக நுண்ணிய துகள் சுவாசகாற்றுக்குள் சென்று ஆஸ்துமா போன்ற நுரையிரல் தொற்று தடுக்கவும், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வேதிபொருட்களை ஆய்வகத்தில் பயன்படுதும் போது வேதி பொருளின் ஆவியானது(chemical vapour) முகத்தில் பட்டு தோலின் மெலனினுக்கு கேடு விளைவிக்காமல் இருக்கவும் பயன்படும். சிந்திக்கும் போது தடவ முடியும் :-)

வேடதாரிகளுக்கு வேடமிட ஆளும், நேரமும் நிறைய உண்டு. சராசரியாக ஒரு ஆண் 15 – 65 வயது வரை முகத்தில் இருக்கும் முடியை நீக்க வேண்டும் என்று வைப்போம் (நீக்குவோம்), ஒரு முறைக்கு 20 நிமிடம் என்றால் வாரத்திற்கு 2 – 3 முறை, வருடத்திற்கு சுமார் 52 மணி நேரம், சராசரியாக 50 வருடம் என்று கணக்கிட்டால் ஒரு மனிதனுக்கு ((52 x 50)/24)= 108.3 முழு நாள் தேவை படும், அது மட்டு அல்லது உபகரணங்கள் சவர கத்தி, சோப்பு, படிகாரம் மற்றும் பல., (Razer, Blade, Shaving cream, Brush, After shave lotion, Moisturiser , Anti oil cream, finally Powder to avoid oily face due to moisturiser cream) அதுதான் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாச்சே அத போயி மழிச்சா? skin rashes, infection, powder ரால சருமத்தின் நுண்ணிய துளை அடைபட்டு பரு வரும்  அப்புறம் அதுக்கு ஒரு கிரீம் So Sad :-(
  

மொத்தத்தில் போராளி, ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன், உழுபவனும் தாடியுடனே காணப்பட்டனர்.

தாடி எடுத்தால் என்ன வரும் (வராது)
அறுவை சிகிச்சியையின் போது முடியினை நீக்குவார்கள், தவறினால் உடலின் உட்பகுதியில் தவறுதலாக முடி செல்ல வாய்ப்பு இருக்கு, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தபடும்  மிக கூர்மையான உபகரணத்தால் வெட்டப்பட்டு!!!
நல்லா வளந்த தாடி நைசா இருக்கும், இளந்தாடியால் இருவருக்கு பிரச்சனை இருக்ககும். குழந்தையை ஈன்றெடுத்த அன்னைக்கு, மற்றொன்று குழந்தைக்கு. ரெண்டுமே முத்தத்தின் போது!!!
மற்றபடி தாடியால் ஒரு பிரச்னையும் வராதுங்க.
ஒரு கருவுற்ற பெண்ணின் கணவன் ஏன் தாடி வைக்கிறான்?
தாடியை எடுக்கும் மனிதர்கள் எல்லாம் மீசை , தலை முடி மற்றும் புருவத்தையும் நீக்காமல் இருப்பது ஏன்?
மொத்தத்தில் கவுண்டமணி, செந்தில் செய்யிற நகைச்சுவை தான் நினைவுக்கு வருது,
செந்தில்: அண்ணே எனக்கு ஒரு டவுட்டு.
மணி:  என்னடா தேங்காய் தலையா.
செந்தில்: என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கனே.
மணி: டேய் இதுக்குதான் ஒரு ஆளினால் அழகுராஜா வேணுங்கிறது.
செந்தில்: தலையில மொளைச்சா அது தலை முடி, நெஞ்சில மொளைச்சா அது நெஞ்சி முடி அப்பறம் எனே மொகத்தில் மொளைச்சா மட்டும்  தாடிங்கராங்க?????
மணி: கோமுட்டி தலையா டேய் அவன புடிங்க........
தாடையின் பகுதியில் வளரும் முடி காலபோக்கில் மருவு மொழியாக தாடியானது (தாடை முடி)

உங்களின் நண்பர்களையும் உங்கள் ஆண் மகனையும் தாடி எடுக்க வற்புறுத்தாதீர்கள்
   

Punch :  தாடியோட இருந்தா தான்.......  ஆம்பிள சிங்கம் :-)

குறிப்பு: style தாடிக்கு மேலே சொன்ன நற்பலன்கள் பொருந்தாது.

அன்புடன்