Pages

Saturday, September 28, 2013

மருத்துவத்தால் பாதிக்கிறதா மக்கள்நலம்?



உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது. 


திருக்குறளின் மருந்து என்ற அதிகாரத்தின் பத்தில் ஏழு குறட்பாக்கள் உணவைப் பற்றித்தான் உள்ளன. மூன்றுதான் மருத்துவம், மருத்துவர் பற்றியும் உள்ளது.

உணவு மிஞ்சினாலும் குறைந்தாலும், ஒவ்வாத உணவைத் தவிர்த்து பசியின் தன்மைக்கேற்ப செரித்தபின் அளவறிந்து உண்டால் மருந்து தேவைப்படாது.  நீண்ட காலம் வாழலாம். நோயில்லை, இன்பம் என்று ஏழு குறட்பாக்களிலும்............... நோயாளியின் வயது, தன்மை, நேரம்; நோயின் தன்மை அறிந்து ஆராய்ந்து சிகிச்சையும் நோய் வராமல் காக்கும் வழிகளையும் கற்றவன் மருத்துவன். நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவம், மருந்து கொடுப்பவன் எல்லாம் உள்ளடக்கியது மருத்துவமுறை என்று மூன்று குறட்பாக்களிலும் கூறியுள்ளார்.

வள்ளுவன் காலம் முதற்கொண்டு மருத்துவத் தொழிலையும், மருத்துவர்களையும் கடவுளுக்கு நிகராகப் போற்றி வந்துள்ளனர். மருத்துவர்கள் செய்வது அறத்தொழில் என்பதில் எந்த மாறுபாடான கருத்தும் இன்றி மருத்துவம்(ர்), மருத்துவத்துறையில் நம் நாட்டின் நிலைமை சிந்திக்கத் தூண்டியது. அவற்றை இங்கு பகிர்கிறேன். 

இந்தியா மருத்துவத் துறையில் தன் பொறுப்பிலிருந்து பெரிதும் விலகி GDPயில் மருத்துவத்திற்கு அரசாங்கம் செலவிடும் அளவு 1.1% மட்டுமே.  இது மற்ற வளரும் நாடுகளின் அளவைக் காட்டிலும் மிகவும் குறைவு. தனியார் மயத்தால் நகரங்களில் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகமாக உள்ளது. கிராமங்களில் பள்ளிகளின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளதே. மருத்துவர் மக்கள்விகிதம் நம் நாட்டில் 1000 பேருக்கு 0.65 மருத்துவர்கள். அதாவது 10,769 பேருக்கு 7 மருத்துவர்கள் உள்ளனர். இதே விகிதத்தின் உலக சராசரி 1000 பேருக்கு 1.2 மருத்துவர்கள். இந்தக் கணக்கு கூட இந்தியாவின் மொத்தம் ஏழு லட்சம் மருத்துவர்களுக்கும் மக்கள்தொகைக்குமான விகிதம் தான். இந்தியாவின் கிராமங்களில் இந்த விகிதம், நகரங்களை விட 6 மடங்கு குறைவு (பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்). 

இந்திய ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் வார்த்தைகளில் பார்க்க.


நகரங்களில் கூட மருத்துவமனைகளின் எண்ணிக்கை தான் அதிகமே ஒழிய மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஒரே மருத்துவர் பல மருத்துவமனைகளிலும் (consultant, specialist, etc) பணியாற்றி வருகிறார் தன் சொந்த கிளினிக்கையும் சேர்த்து. நம் நாட்டின் மருத்துவர்கள் தூங்கும் நேரம்,  உண்ணும நேரம் தவிர அனைத்து நேரங்களிலும் மருத்துவப்பணிதான் செய்கிறார்கள். ஏன்? 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை. இதனால் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான பரிசோதனை செய்ய நேரம் இருக்காது, அதாவது நோயின் அறிகுறியை சரியாக கணிக்காமலே தவறான சிகிச்சைக்கு வாய்ப்புள்ளது. ஒரே நோயின் தீவிரம்  ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். ஒரே சிகிச்சை பலனளிக்காது. ஒரே மருந்து அளவு தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமான பணிச்சுமையால் மருத்துவப் படிப்புடன் மருத்துவத் துறையின் புதிய விஷயங்களின், ஆராய்ச்சிகளின்  update இல்லாமல் போய் விடுகிறது. மருத்துவர்களின் அறிவு ஒரு வாரத்திற்கு இவ்வளவு மருந்துகள் விற்க வேண்டுமென்ற விற்பனை இலக்கு/லாப நோக்கத்தோடு உள்ள மெடிக்கல் ரெப்பிரசண்டுகளின் வாயிலாகவே நிகழ்கிறது. மருத்துவர்களின் சிறு பேனா முதல் கிளினிக்கில் உள்ள எல்சிடி டிவி வரை மருந்துக் கம்பெனிகள் அளித்த அன்பளிப்புகளாகவே இருக்கும். இவ்வளவு மருந்தும் தேவையில்லாமல் நோயாளிகளின் மேல் திணிக்கப்படுவதாக உங்களுக்கும் தோன்றுகிறதா?
இதைவிட மோசமான இன்னொரு உண்மை. ஒரு மருத்துவருக்கு 6 செவிலியர்கள் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு மருத்துவருக்கு ஒரு செவிலியர் தான் உள்ளார். மொத்தம் 24 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை. 35000 மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தான் உள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை. ஒரு வருடத்திற்கு நாட்டிலுள்ள 350 மருத்துவக் கல்லூரிகளில் 45,000 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள். இதே நிலையில் மருத்துவர்கள் வெளிவந்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டு தான் செல்லும். இதனால் தான் எந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றாலும் காத்திருக்க வேண்டியுள்ளது, கிராமத்தினர் பல கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டியுள்ளது. இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மக்களை சுரண்டிக்கொண்டுள்ளதாக நம்புகிறீர்களா?

நீதிபதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தன் சொத்துக் கணக்கை காட்ட வேண்டிய சட்ட நிர்பந்தங்கள் உள்ளன. இருந்தபோதிலும் நாட்டில் கருப்புப்பணம் அதிகமாவதற்குக் காரணமாக உள்ளனர். தொழிலதிபர்களும் தணிக்கைத் துறையின் கண்ணை மறைத்து கறுப்புப்பணத்தை அதிகமாக்குகின்றனர். அரசாங்க மருத்துவர்கள், தன் கிளினிக்கின் மூலமாக கறுப்புப்பணம் உருவாக்குவதில் பெரும் பங்கு உள்ளது. மருத்துவர்களின் கிளினிக்குகளும் வணிக ரீதியானது, தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறதா? இதுபோன்ற கிளினிக்குகளில் டோக்கன் போட ஆளிருக்கிறது. பில் போட ஆளிருக்கிறதா?

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதிலும் கவலை அளிக்கும் விஷயம் கல்லூரிகளின் அனுமதியில் ஊழல் நடப்பது.

கிராமங்களில் மருத்துவர் மக்கள் விகித குறைபாட்டைப் தற்காலிகமாகப் போக்க அரசாங்க மருத்துவர்களை வாரத்தில் இரண்டு நாள் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ சேவை செய்யப் பணிக்கலாம். தனியார் மருத்துவர்களும் இந்த கிராம சேவைக்கு பதிவு செய்து கொண்டு சேவை செய்த நாள்களுக்கு அரசிடமிருந்து ஊதியம் பெறும்படி செய்யலாம்.

நாட்டின் ஆரோக்கியம் மக்கள் ஆரோக்கியமே. மக்களின் ஆரோக்கியத்திற்கு மருத்துவத்துறை மட்டுமே முழு காரணமல்ல. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர், மழைநீர் வடிகால் வாரியம், கழிவு நீர், கழிவு மேலாண்மை, துப்புறவுத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகளின் குறைகளே மருத்துவத்துறைக்கு பெரும் சுமையை அளித்துள்ளது என்று தோன்றுகிறது.

டாடி  எனக்கு ஒரு டவுட்டு ?
M. B. B. S. என்றால் Bachelor of Medicine, Bachelor of Surgery தானே, சுருக்கமாக எழுதவேண்டுமென்றால் B. M. M. S. என்பதுதான் சரி. முதுநிலைப் படிப்பைப் போல தோன்றுவதற்காக இப்படி எழுத்தை மாற்றி எழுதியதுமட்டுமில்லாமல் முனைவர்களை அழைப்பது போல் Dr. என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மருத்துவத்துறை மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இல்லாமல் போன காரணத்தால் போலி மருத்துவர்கள் தோன்றக் காரணமாகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பதின் அடிப்படையே மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு நாட்டின் வருவாயை மக்கள் நலனுக்காக  திட்டமிடுதல்தானே. மத்திய, மாநில திட்டக் கமிஷன்களின் திட்டமிடுதல் குறைபாடுகளின் விளைவா இது.

இப்போதெல்லாம் எளிமையாக நோய்க்குறிப்புகளைக் கண்டறியும் முறைகளை (கண்ணின் தன்மை, நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தல், நாடித் துடிப்பைப் பார்த்தல், உணவு, செரிமானம் பற்றி விசாரித்தல் போன்றவை)   மருத்துவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. நோயாளியை சந்தித்த உடனே, ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை, MRI, CT scan, biopsy, endoscopy, tradmilltest, என்று என்னென்ன தன் கிளினிக்கில் அல்லது தன் பார்ட்னர் ஸ்கேன் சென்டரில் உள்ளதோ அந்த பரிசோதனைகளைப் பரிந்துரைக்கிறார். இவையெல்லாம் நோயாளிக்கு ஒரு திகிலை ஏற்படுத்துகிறது மற்றும் பரிசோதனைகளின் முடிவுகள் புரியும்படி இல்லை. மருத்துவர்கள் புரியவைப்பதும் இல்லை. நோயாளிகளை நோயைப் பற்றி தெளிவாகப் புரியவைக்காமல் மருத்துவர்களைச் சார்ந்தே இருப்பது போன்ற ஒரு நிலையை வேண்டுமென்றே உருவாக்குகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.


பாதுகாப்பான இரத்த அழுத்தம் (BP normal) என்பது 160/100 என்பதாக இருந்தது. 140/90 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் 120/80 என்று 2003இல் WHO ஆல் குறைக்கப்பட்டது. ஏன்? உலகத்தின் பாதி மக்கள் தொகையை இரத்த அழுத்த நோயாளிகளாக வரையறுத்து தன் மருந்துக் கம்பெனியின் மருந்துகளுக்கான நீடித்த வியாபார நோக்கமன்றி வேறு என்ன இருக்க முடியும். இதனால் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப நிலை (pre hypertension, pre hypotension) நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இதே போல 1997ல் இரத்தத்தில் சர்க்கரை அளவையும் (fasting blood glucose level) 140 mg/dL  இல் இருந்து 126/ mg/dL ஆக குறைத்தது அமெரிக்க டையபெடிஸ் அசோசியேசன். இதற்கும் அதே வியாபார காரணம்தான்.  இந்த அளவுகள் என்பது அதிக மக்களின் சர்க்கரை/BPஅளவு எந்த அளவு உள்ளது என்று கணிக்கப்பட்ட பின் வரையறுக்கப்பட்டது.


முதல் வரி மீண்டும் “உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது”

இது போன்ற பல சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கின்றனவா?

References

  1. http://www.who.int/countryfocus/cooperation_strategy/ccsbrief_ind_en.pdf
  2. http://www.thirukkural.com/2009/02/blog-post_4289.html
  3. Subba, Reddy DV, and K. Palanichamy. "Health, disease, physician and medicine in Thirukkural." Bulletin of the Institute of Medicine (Hyderabad) 2 (1972): 141.
  4. http://www.tenet.res.in/Publications/Presentations/zip/Healthcare_in_India.pdf
  5. Deo, M. G. "Doctor population ratio for India-The reality." The Indian journal of medical research 137.4 (2013): 632. http://www.ijmr.org.in/article.asp?issn=0971-5916;year=2013;volume=137;issue=4;spage=632;epage=635;aulast=Deo
  6. http://articles.timesofindia.indiatimes.com/2010-05-12/india/28306471_1_t-dileep-kumar-nursing-colleges-countries
  7. http://www.cbhidghs.nic.in
  8. CHATTOPADHYAY, SUBRATA. "Corruption in healthcare and medicine: Why should physicians and bioethicists care and what should they do?." Indian journal of medical ethics 10.3 (2013). http://ijme.in/213chm153.html
  9. Mendelsohn, Robert S. Confessions of a medical heretic. Lebanon, IN: Warner Books, 1980.
  10. மார்க்ஸ் அ. நமது மருத்துவ நலப் பிரச்சனைகள். பொள்ளாச்சி, இந்தியா: எதிர் வெளியீடு, 2010
  11. http://www.vinavu.com/2013/08/19/a-doctor-exposes-unholy-hospital-practices/
  12. http://seattletimes.com/html/health/sick1.html 
  13. http://www.obesitymyths.com/myth8.2.htm





9 comments:

  1. மக்கள் நோயைப் பற்றி கவலைப்படுவதில்லை.மருத்துவர் சொன்ன மருந்துகள்பற்றியே கவலைப்படுவர்.நோய்க்கு மருந்தா? மருந்துக்கு நோயா?டாக்டர் இந்த கடையில்தான் வாங்கசொன்னார்.இதை இதை இப்படி சாப்பிட சொன்னார்.மருந்தினால் தயாரிப்பாளருக்கும், நோயால் மருத்துவருக்கும் லாபம்.அவர்சொன்ன இடத்தில் எடுத்த டெஸ்டுகள் பெரும்பாலும் நார்மல் என்றுதான் இருக்கும்.இருந்தாலும் இந்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.மற்றும் தங்களுடலை மாதமொரு முறை பரிசோதித்துக்கொள்ளவும் வேண்டும்.நோயாளிக்கு நோய் இருக்கும் எனவே அவருக்கு நஷ்டம்.மருந்துக்கும் மருத்துவருக்கும் பணம் சேரும்.எனவே அவர்களுக்கு லாபம்.அரசியல் போல மருத்துவத்திலும் இதெல்லாம் சகஜமப்பா.

    ReplyDelete
  2. சிவசங்கர்October 9, 2013 at 9:23 AM

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல் - 948, திருக்குறள்

    - உடல் நோய்க்கு மட்டுமின்றி சமுதாய நோய்க்கும் இதன் பொருள் பொருந்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. சிவசங்கர்,
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. மிக நல்ல கட்டுரையை மிகுந்த தேடலுடன் தந்திருக்கறீர்கள்.
    நன்றி.

    பெரும்பாலனவற்றுடன் ஒத்துக் கொள்கிறேன்.

    நீரிழிவு வெளிப்டையாகக் கண்டுபிடிக்க முன்னரே பலருக்கு கால்விறைப்பு, ஆண்மைக் குறைபாடு உட்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. கால்களை அகற்றல், தீராத புண்கள் மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்பட்ட பின்னர் மருந்துகளைத் தேடி ஓடுவதில் பயனில்லை. ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்க வேண்டும் என்பதால்தான, பலவேறு ஆய்வுகளின் பின்னர் பிரஷர். நீரிழிவு ஆகியவற்றின் அளவுகளைக் குறைத்துள்ளார்கள்.

    இத்தகைய பாதிப்புகளால் மிகவும் துன்புறும் நிலையை நேரில் கண்டால்தான் அத்தகைய நோய்களின் கொடுமையை உயர முடியும்.

    மருந்துக் கம்பனிகள் பற்றி நான் பேச வரவில்லை. அவர்கள் தங்கள் ஆதாயத்திற்காகவே செயற்படுவார்கள்.

    இதைக் கருத்தில் கொண்டே நான் பெரும்பாலும் மருந்துகளின் பெயர்களைக் குறிபிபடுவதைத் தவிர்த்து வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.
      உணவுமுறை, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, நோய்க்கான காரணங்கள் போன்றவற்றிற்கு மருந்துகளைவிட அதிக முக்கியத்துவம் தந்திருப்பதை உங்கள் கட்டுரைகளில் கவனித்திருக்கிறேன்.

      Delete
  4. மிக அருமையான கட்டுரை.பலருக்கும்கண்டிப்பாக பிரயோஜனப்படும் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸாதிகா.

      Delete
  5. மிகவும் பயனுள்ள கட்டுரை. ஆனாலும் இந்த நம்பர்கள் நம்மை பயமுறுத்துகின்றன.
    மருந்து சாப்பிடுவதா? இல்லை மருந்தே வேண்டாம் என்று விட்டு விடுவதா?
    குழப்பமாக ருக்கிறதே.

    ReplyDelete
  6. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனதை ஒருமிக்கவும்.மனஅழுக்கை களைவதால் நோய்அகற்றலாம்.இதை கற்றுத்தருவது யோகா.இதைசெய்தால் ஆரோக்யமாக வாழலாம்.மனம் இருந்தால்
    மார்கம் உண்டு.

    ReplyDelete