Pages

Saturday, December 31, 2011

காலண்டர் மாற்றும் திருவிழா



௦௦00.00.00.00௦௦ என்ன இது? புத்தாண்டு கொண்டாடும் நேரம். பூமி சூரியனை ஒரு ரவுண்டு வந்ததயா கொண்டாடுகிறோம்? ஒரு நீள்வட்டப் பாதையின் முடிவு எது? ஆரம்பம் எது? பூமி இந்த சுற்றிவரும் விளையாட்டை ஆரம்பித்த ஆண்டு தெரியுமா? சூரியன்தான் பூமிக்கு சுற்றுலாத் தலம். நிலவுக்கு பூமி. நாமும் பூமியுடன் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறோம் சூரியனை. நிலவு நம்மை சுற்றிக் கொண்டு இருக்கிறது. சூரியன், புதன், வெள்ளி கிரகங்களைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் நம்மையும் சேர்த்து சூரியனை சுற்றிக்கொண்டுள்ளன. நாம் ஏன் நவகிரகங்களையும் கோயிலில் சுற்ற வேண்டும்? 

ஹாப்பி நியூ இயர் கொண்டாடும் மக்களே! ஆங்கிலப் புத்தாண்டின் சிறப்பென்ன தெரியுமா?
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்து பெரும்பாலான நாடுகளில் அதிகபட்ச மக்களால் கொண்டாடப்படும் விழா இதுதான். இதற்கு ஈடான ஒரு விழா (இந்த கோணத்தில்) வேறு இல்லை. ஆங்கில காலண்டர் கிருஸ்து பிறந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. அவர் பிறந்த நாளாக கருத்தப்படும் டிசம்பர் 25 கி. மு. வா? கி. பி. யா? அவர் பிறந்த தேதியையே ஜனவரி 1 ஆக அமைத்திருக்கலாமே. 
             

சூரியக் குடும்பத்தை வைத்துதான் காலண்டர் முறையை கணக்கிட்டார்கள். ஆனால் ஏன் கோள்களின் வரிசைக்கிணங்க வாரநாள்களுக்கு பெயர் வைக்கவில்லை? சூரியக் குடும்பத்தின் படி வாரநாள்களுக்கு பெயர் வைத்திருந்தால்..........

ஞாயிறு                       Sunday
புதன்                           Wednesday
வெள்ளி                       Friday
திங்கள்                        Monday
செவ்வாய்                    Tuesday
வியாழன்                     Thursday
சனி                             Saturday        

இப்படித்தான் இருந்திருக்கும். நம் காலண்டர்.

டைப்ரைட்டரிலும், கீபோர்டிலும்
QWERTYUIOP
ASDFGHJKL
ZXCVBNM
போல கோள்களின் வரிசைகளையும் மாற்றி வைத்தான் கிறுக்கு மனிதன்.

புளூட்டோவை சிறிது காலத்திற்கு முன்  நம் (சூரிய) குடும்பத்திலிருந்து நீக்கி விட்டார்கள். அது என்ன இவர்களை நம்பியா சூரியனை சுற்றிக் கொண்டுள்ளது இத்தனை காலமாய்.

இந்தியாவிலேயே பல காலண்டர்கள் உள்ளன. தமிழ் காலண்டர், தெலுங்கு காலண்டர், ஹிந்து காலண்டர், முஸ்லிம் காலண்டர் இன்னும் பிற. அனைத்து புது வருடங்களும் தமிழனின் அணுகுமுறையில், வருடப் பிறப்பு என்றுதான் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்பது new year என்பதின் மொழிபெயர்ப்பு. நீர்வீழ்ச்சி – waterfalls என்பது போல. அருவி என்ற அருமையான சொல் இருந்த போதிலும். மொழி பெயர்ப்பைப் பற்றி என் இன்னொரு கருத்து. மின்விசிறி, மின்விளக்கு மற்றும் பல்வேறு பொருட்களுக்கு ‘மின்’ என்ற   முன்னொட்டு. இந்த சொற்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட காலத்தில், வீட்டில், விசிறி மட்டையும் இருந்தது, மின்விசிறி –fan ம் இருந்தது. இப்போது உங்கள் வீட்டில் விசிறி மட்டை உள்ளதா? அதனால் ‘மின்’ ஐ தூக்கிவிட்டு விசிறி என்றே பயன்படுத்தலாம். வீட்டில் பாதி நேரம் மின்சாரம் இல்லாததாலும் ‘மின்’ ஐ தூக்கி விடலாம். இது போல நாம் பல பாரம்பரியமான சொற்களைக் காக்க முடியும். மைக்ரோசாப்ட் இன்னும் save icon க்கு பிளாப்பி டிஸ்க் ஐ தான் பயன் படுத்துகிறது. அதைப் போல நாமும் நம் பாரம்பரிய சொற்களைக் காப்பாற்றுவோம்.


மீண்டும் புத்தாண்டிற்கு வருவோம். 2012 காலண்டரில் இரண்டே வரிதான். ஜனவரி, பிப்ரவரி. மார்ச் மாதம் கட்டாயம் கட்ட வேண்டும் வருமான வரி. 2012ன் இன்னொரு சிறப்பென்ன தெரியுமா? இவ்வருடம் வாரத்தின் ஆரம்ப நாளான ஞாயிறில் தொடங்குகிறது. திங்களில் முடிகிறது. சூரியனில் தொடங்கி, சந்திரனில் முடிகிறது பகல் இரவைப் போல.  2012 மிக வேகமாக ஓடிவிடும் என்று தோன்றுகிறது.

வாழ்த்துக்கள். இவ்வளவு நேரம் படித்ததற்கு.

7 comments:

  1. see this blogpost too...
    vaidheeswaran-rightclick.blogspot.com/2010/12/blog-post.html?m=1

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு, ஆனால் நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் சிலவற்றிற்கு எனக்கு தெரிந்த அளவுக்கு பதில் சொல்லலாமென்று எழுதுகிறேன். கிறிஸ்து பிறப்பு - நீங்கள் எழுதியது போல டிசம்பர் 25 என்பது ஒரு உத்தேச தேதி தான். பைசான்டைன் பேரரசின் (ரோம பேரரசையும் உள்ளடக்கியது) [குறிப்பு: பைசான்டைன் பேரரசு தான் பின்னாளைய ரோம பேரரசின் முன்னோடி]குளிர்கால துவக்க நாள் (Winter Solistice) தற்பொழுது டிசம்பர் 21 ஆம் தேதி வரும், பைசான்டைன் பேரரசின் மக்கள் (ரோமர்களையும் சேர்த்து) கிருத்துவத்தை ஏற்று கொண்ட பொழுது (மன்னர் கான்ஸ்டாண்டிநோபில் இறக்கும் தருவாயில் மதம் மாறி தொலைத்ததால் மக்களும் மாற வேண்டிய நிர்பந்தம்) அவர்களின் முன்னால் மதத்தின் பல சம்பிரதாய, விசேஷ நாட்களையும் கிருத்துவத்திற்கு புகுத்தினர். அதன்படி அவர்களின் அன்றைய குளிர்கால துவக்க நாள் கோலாகல கொண்டாட்ட நாளான டிசம்பர் 25 கிருத்து பிறப்பாக கொண்டாடப்பட்டது. அதே போல் வெயில்கால துவக்க நாள்(Summer Solistice) மார்ச் 21 ஈஸ்டர் தினமாக அனுஷ்டிக்க படுகிறது. கிருத்துவத்தின் இரு முக்கிய தினங்களை பைசான்டைன் பேரரசின் மக்கள் (ரோமர்களையும் சேர்த்து) தங்களின் பழைய மதம் சார்ந்த சிறப்பு நாட்களோடு இணைத்தனர். அதுவே மேற்கு ஐரோப்பாவெங்கும் பரவி பின் உலகெல்லாம் பரவியது.
    ஏன் கிருத்து பிறப்பு தேதி என கருதப்படும் டிசம்பர் 25க்கு பதில் ஜனவரி 1 புத்தாண்டு நாளாக கொண்டாடப்படுகிறது? - 13ஆம் நூற்றாண்டு வரை ரோமர்களின் ஜூலியன் நாட்காட்டி (காலண்டர்) [குறிப்பு: ரோம பேரரசர் ஜூலியஸ் சீசர் காலத்தில் உருவாக்கியது] தான் ஐரோப்பாவெங்கும் பரவலாக உபயோகத்திலிருந்தது. பின்னாளில் போப்பாண்டவர் கிரேகோரி (Pope Gregory) புதிய நாட்காட்டியை உருவாகிய பொழுது ஒரு வருடத்தில் நாட்கள் 365.25 நாட்கள் என்று கணக்கிட்டு டிசம்பர் 25லிருந்து 7 நாட்கள் சேர்த்து ஜனவரி 1 தான் புத்தாண்டு என்று உருவாக்கினார். இதற்கான கணிதங்களும் ஏன் டிசம்பர் 25லிருந்து 7 நாட்கள் சேர்த்தார் என்பது தனியாக ஒரு பெரும் கணித கதையாக வரும், அதை வேறு எதாவுது அறிவியல் தளங்களில் படித்து பாருங்கள் மிக அருமையாக இருக்கும். (http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar)
    இவ்வாறாக உருவான நாட்காட்டி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆண்ட இடங்களெங்கும் பரவியது. ஐரோப்பா தான் உலகத்தையே ஆண்டதே!!! அதன் விளைவாக தான் எங்கு பார்த்தாலும் ஏதோ இதுவே புத்தாண்டு என்ற பிரமை உருவாக காரணமாகியது. ஆனாலும் சீனர்கள் தங்களின் புத்தாண்டை தான் முக்கிய நாளாக கொண்டாடுவார்கள். ஜப்பானியர்களும் கொரியர்களும் கிரகோரியன் நாட்காட்டியையே ஏற்று கொண்டு [ பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான்] மாதங்களுக்கு தங்கள் மொழியில் பெயர் சூட்டி கொண்டனர். அடிமைகளுக்கேது பகுத்தறிவு ஆகையால் தான் நம்மவர்கள் பலர் ஏன் ஏதற்கு என்று தெரியாமல் கிருத்துவ மத குருமார்கள் கொண்டு வந்த புத்தாண்டிற்கும் இரவு பன்னிரண்டு மணிக்கு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர் (ஆகம விதிகள் படி, அந்திம கால பூஜை முடிவடைந்த பிறகு வேறு பூஜைகள் செய்ய கூடாது). இன்னும் பலர் உலகம் கொண்டாடுகிறது ஆகையால் நானும் கொண்டாடுகிறேன் என்று கூறி மீண்டும் மீண்டும் நாம் அடிமைகள் அன்று நிரூபிக்கின்றனர்.

    ReplyDelete
  3. சூரியக் குடும்பத்தை வைத்துதான் காலண்டர் முறையை கணக்கிட்டார்கள். ஆனால் ஏன் கோள்களின் வரிசைக்கிணங்க வாரநாள்களுக்கு பெயர் வைக்கவில்லை? - ஆம் சூரிய குடும்பத்தை வைத்து தான் நாட்காட்டியை கணக்கிட்டார்கள். ஆனால் நீங்கள் எழுதியது போல் சூரியன் மத்திம கொள்கையை கொண்டல்ல பூமி மத்திம கொள்கையை கொண்டு கணக்கிட்டார்கள். 17ஆம் நூற்றாண்டு வரை கிருத்துவ திருச்சபை சூரியன் மத்திம கொள்கையை ஒத்துக்கொள்ளவில்லை, காப்பர்நிக்கஸ் சொல்லி, கெப்ளர் சொல்லி, கலேலியோ சொல்லியும் அவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வைக்கபட்டார்களே ஒழிய மத குருமார்கள் ஒத்துக்கொள்ளவில்லை, மத குருமார்களே ஒத்துகொள்ளவில்லையெனில் அரசரும் பின் மக்களும் கூட ஒத்துகொள்ளமாட்டார்கள். முன்னமே பார்த்தது போல போப்பாண்டவர் மற்றும் ரோம பேரரசர் ஆகியோர் உருவாக்கிய நாட்காட்டியில் பூமியை சுற்றி வரும் கிரகங்களாக தான் அணைத்து வின் கோள்களையும் கண்டனர். ஆகவே ஒவ்வொரு கோளின் உதய நேரங்களையும் (சூரியனிலிருந்து ஆரம்பித்து) அவை பூமிக்கு எவ்வளவு அருகில் தெரிகின்றனவோ ஆகியவற்றை வைத்து உருவாகியது தான் நாள் பெயர்கள் (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Weekday_names )அதன் படி தான்
    ஞாயிறு - Sunday - Sun
    திங்கள் - Monday - Moon
    செவ்வாய் - Tuesday - Mercury
    புதன் - Wednesday - Mars
    வியாழன் - Thursday - Jupiter
    வெள்ளி - Friday - Venus
    சனி - Saturday - Saturn
    நம்மவர்கள் தான் மேற்குலகம் ஏதை சொன்னாலும் ஏற்றுகொள்வார்களே ஆகையால் கேள்வியின்றி மொழிமாற்றம் செய்துவிட்டோம்.
    ஏன் "QWERTY" வகை கிபோர்ட்கள் பழக்கத்தில் உள்ளது? - இதற்கும் ஒரு காரணம் உண்டு, டைப்ரைட்டர் கண்டுபிடித்தபொது முளைத்த பிரச்சனைக்கான தீர்வு தான் இது. ஆங்கில எழுத்துக்களை வரிசையாக அடுக்கிய டைப்ரைட்டரில், அதிகமாக உபயோகபடுத்தப்படும் வார்த்தைகள் அடிகடி உபயோகபடுத்தியபொழுது ஒன்றோடு ஒன்று உராய்ந்து பிரச்னை ஏற்படுத்தின, ஆகையால் வந்ததே "QWERTY" வகை கிபோர்டுகள் பார்க்க - http://home.earthlink.net/~dcrehr/whyqwert.html தமிழ் புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு, மலையாள புத்தாண்டு, கன்னட புத்தாண்டு - எது தான் உண்மையான புத்தாண்டு? - இன்றைய காலத்தில் தென் இந்தியாவில் உள்ள அனைத்து புத்தாண்டுகளும் சமஸ்கிருத புத்தாண்டையே வெவ்வேறு பெயர்களோடு விளங்குகிறது, இவற்றில் எவற்றுக்கும் பெரிய வித்தியாசமில்லை. தற்பொழுது தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் ஆண்டு என்பது 19ஆம் நூற்றாண்டில் மறைமலை அடிகள் மற்றும் பலரால் உருவாகிய தமிழ் எழுச்சி காலத்தில் உருவாக்கபட்டதே ஆகும், ஆகையால் அதையும் தமிழரின் தொன்மையான நாட்காட்டி என்று ஏற்றுகொள்ள முடியாது. பல்லவர் காலத்துக்கு முன்னாள் சமஸ்கிருத கலப்பில்லாத தமிழர் நாட்காட்டியும் வானியல் சாத்திரங்களும் அதன் மூலம் உள்ள புத்தாண்டும் பலருக்கும் தெரியாது. அவை தான் தமிழரின் உண்மையான புத்தாண்டு (படிக்க: தமிழரின் வானியல் சாத்திரங்கள், கிழக்கு பதிப்பகம்).
    நண்பரே, உங்கள் பதிப்பு மிகவும் நன்றாக உள்ளது மேலும் ஏழுதுங்கள் நிறைய ஆய்ந்து நிறைய படித்து நிறைய விசயங்களை ஏழுதுங்கள். உங்கள் ஏழுத்துக்களை வரவேற்கின்றேன். - நன்றி, சேந்தன்.

    ReplyDelete
  4. Correction:
    Tuesday - Mars - செவ்வாய்
    Wednesday - Mercury - புதன்

    ReplyDelete
    Replies
    1. என் பதிவிற்கு கருத்தும் பதில்களும் ஆதரவும் வழங்கியமைக்கு மிக மிக நன்றி திரு.சேந்தன்.

      Delete
  5. நிறைய செய்திகளை சேகரித்து ஒரே இடத்தில் தந்தமைக்கு நன்றி..........

    ReplyDelete
  6. very nice ji. please dont think that i am commenting here in english. i too have very good passion towards tamil. and about this blog, i can see that my thoughts are similar with your thoughts and i agree with your words. keep posting. thank you!

    ReplyDelete