Pages

Showing posts with label பறவை. Show all posts
Showing posts with label பறவை. Show all posts

Sunday, May 3, 2015

தாதூண் பறவைகள் - பறவைகளும் தண்ணீரும்

மலைகள் இணைய இதழ் 4 ஆம் ஆண்டு சிறப்பிதழில் பதிப்பிக்கப்பட்ட என் கட்டுரை  

http://malaigal.com/?p=6705

கட்டுரைச் சுருக்கம்:

இவ்வுலகில் உள்ள 8650 பறவையினங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை உணவுக்காக வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து மற்றும் வளர்ப்புப்பிராணிகளாக வளர்க்கப்படும் பறவைகளும் தான். 8650 இனங்களில் 1200 இந்தியாவில் காணலாம். நிலத்தின் மேல் உள்ள நீர்நிலைகள் அளவில் சுருங்கி மாசடைந்து குளங்கள், ஏரிகள், ஆறுகள் விஷ சாக்கடையாக உள்ளன. போர் போட்டு தொட்டியிலும் புட்டியிலும் நீரை அடைத்து வைத்துள்ளோம். நீர் இல்லாமல் நமக்கு நா வரளும். வியர்வை சுரப்பியற்ற பறவைகளுக்கு உடலும் வரளும். பறவைகள் தாகம் தணிக்க எங்கே தேடியலையும்? பறவைகளின் நீர் குடிக்கும் பழக்கங்கள், நீர் தேவை போன்றவற்றின் காரணங்கள். 


சில வாரங்களுக்கு முன் நான் காலையில் பணிக்குச் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தேன். சாலை ஓர மர நிழலில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கையை நீட்டி என்னை அழைத்தாள். ‘என்னம்மா வேண்டும்’ என்று கேட்டு விட்டு நின்றேன். மூதாட்டி தன் கையிலிருந்த வாட்டர் பாக்கெட்டை என்னிடம் கொடுத்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் உலர்ந்து போன வாயினால் ‘தண்ணியை பிரிச்சு குடிக்க கொடு’ என்று கூறினாள். ‘கடிச்சி பாக்கெட்ட பிரிக்கவா?’ என்றதும், சரி எனத் தலையாட்டினாள். அவளுக்கு தண்ணீர் பாக்கெட்டைப் பிரித்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன். தண்ணீர் கையிலிருந்தும் நகமோ பல்லோ இல்லாமல் குடிக்க முடியாத நிலையில் மூதாட்டியின் நிலையை பிறகு எண்ணி வருந்தினேன்.
தண்ணீரை நாம் இந்த அளவுக்கு அடைத்துவைத்து விற்பனைப் பொருளாக்கி இருக்கிறோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும், நகரங்களில் பொதுவான குடிநீர் அல்லது சுத்தமான நீர் எங்குமே இல்லை. அனைத்து நிலத்தடி நீரையும் உறிஞ்சி மேல்நிலைத் தொட்டிகளிலும், லாரியின் தொட்டிகளிலும், மற்ற வாட்டர் கேன்களிலும் அடைத்து வைத்து ஆளுமை செலுத்துகிறோம். காசுள்ள மனிதர்கள் குடி நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பறவைகளும் விலங்குகளும் சிறு உயிரினங்களும் தண்ணீருக்கு எங்கு செல்லும்?

சரி. நீர் எங்குமே இல்லையா என்று கேட்கலாம். வெளியே நாம் பார்க்கும் நீர் அனைத்துமே நாம் வீடுகளில், அலுவகங்களில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தி கழிவாக வெளியிடப்பட்ட நீர் அல்லது இக்கழிவுகளால் மாசுபட்ட நீர்தான். விவசாய நிலங்களைக் கடந்து செல்லும் பாசன நீரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மாசடைந்து தான் உள்ளது.

இயற்கை ஒரு இடத்தில் கட்டிப் போடப்பட்டு அங்கு மட்டும் செயல்படுவதில்லை. இதை நாம் புரிந்துகொள்ள நீர் ஒரு சிறந்த உதாரணம். மாசடைந்த நீர் எல்லாப் பகுதுகளிலும் பாய்கிறது. நிலத்தின் உள்ளே இறங்குகிறது, நிலத்தடி நீருடன் கலக்கிறது. நிலத்தடி நீர் நகர்ந்து கொண்டே இருக்கிறது. பல மைல்கள் தாண்டி உள்ள கிணற்றின் ஊற்றுகளிலோ, குளத்தின் அல்லது நீர்நிலைகளின் ஊற்றுகளாகவோ வந்து கலக்கிறது.
இயற்கையில், பறவைகளும் நீரைப் போலவே கட்டிப்போடப்படாத ஒன்று. பறவைகள் ஆண்டுக்கு இருமுறை இலையுதிர் காலத்திலும் இலைதுளிர் காலத்திலும் பல்லாயிரக்கணக்கில் பல பறவைகள் வடக்கும் தெற்குமாக சில மைல்கள் முதல் பல ஆயிரம் மைல்கள் வரை பயணித்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்புகின்றன. வலசை வந்த இடத்தில் குஞ்சு பொறித்து தன் தாய் தேசம் திரும்பும் போது இளம் பறவைக் குஞ்சுகளே தன் முதல் பயணத்தில் பறவைக் கூட்டத்தின் முன்னே வழி காட்டிப் பறக்கின்றன. வியப்பு தான் மிஞ்சுகிறது. பல ஆபத்துகள் அடங்கிய ‘வலசை’ என்று வழங்கப்படும் இடம்பெயர்தலின் காரணங்களும் திருப்தியான விளக்கங்களும் இன்னும் விளக்கப்படாத வியப்புக்குரிய ஒன்று.

சென்னையில் நாம் பார்க்கும் பறவைகளில் வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகளும் அடங்கும். உலகமெங்கிலும் பறவைகளுக்கு நீர் அளிக்க பல உயிர்மநேயம் உள்ளவர்கள் தன் வீட்டு முற்றங்களிலும், வீட்டின் முன்னும் பின்னும், கூரை மீதும் கிண்ணங்கள் வைத்து நீர் ஊற்றி வைக்கிறார்கள். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் கோடை காலத்தில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் நீர் உறைந்து பறவைகளுக்கு நீர் இல்லாமல் போவதால் வெதுவெதுப்பான நீர் கிண்ணங்களில் நிரப்பி வைக்கப்படுகிறது.

பூமியின் பெரும்பகுதி நீர்தான் என்றாலும் குடிப்பதற்கு ஏற்ற நீர் மிகவும் குறைந்த அளவே உள்ளது. நகரமயமாக்கலில் பல நீர்நிலைகளை இழந்துவிட்டோம். இந்த நீர்நிலைகளை நம்பி வாழ்ந்த பல பறவைகளைப் பற்றியும், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் பறவைகளைப் பற்றியும் சிறிது கூட நாம் சிந்திக்கவில்லை. பறவைகள் மரத்தில் கூடு கட்டும் என்று பொதுவாக அறிந்திருக்கிறோம். நீர் நிலைகளுக்கருகே வாழும் மீன்கொத்தி மண்மேடுகளில் படுக்கை வாட்டமாக சுரங்கம் போல் அமைத்து முடிவில் அகன்று இருக்கும் பகுதியில் முட்டையிடும் வழக்கமுள்ளது. வலசைப் பறவைகளான பூநாரைகள் அல்லது செங்கால் நாரைகள் (flamingo) ஒரு அடி உயரத்திற்கு களிமண்ணைக் கொண்டு கூம்பாக கூடமைக்கும். சூரிய வெப்பத்தில் காய்ந்து அடுப்புபோலிருக்கும் அதன் உச்சியில் குழி போல் அமைத்து முட்டையிட்டு கால்களை மடக்கி அமர்ந்து அடைகாக்கும். இன்னும் பல பறவைகள் தண்ணீரில் மிதக்கும் கூடுகளை அமைக்கும். நாம் பல காரணங்களுக்காக நீர் நிலைகளை அழிக்கும்போதும், நீர்நிலைகளின் தன்மையைக் கெடுக்கும்போதும் இப்பறவையினங்களை அழிவுக்குத் தள்ளுகிறோம்.

மீன்கொத்தியின் கூடு 





பூநாரைகளின் மண்கூடு  
நீரின்றி அமையாது உலகு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அனைத்து உயிர்களுக்கும் நீர் ஒரு அத்தியாவசியத் தேவை. பறவைகளின் உடல் வெப்ப நிலை பாலூட்டிகளின் உடல் வெப்ப நிலையை விட அதிகமிருக்கும். பாலூட்டிகளைப் போல உடலில் வியர்வைச் சுரப்பிகள் பறவைகளுக்கு இல்லை. பறவைகளுக்கு பாலூட்டிகளைவிட குறைவான நீரே தேவைப்படும். இருப்பினும் நீரே இல்லாமல் வாழ முடியாது. பறவைகளின் உடலில் நீர் இழப்பு தோலின் மேல்புறத்திலும், சுவாசிப்பதால் நுரையீரல் ஈரப்பதத்தையும் இழக்கும், உடல் கழிவு வெளியேற்றத்திலும் நீர் இழப்பு நடக்கும். வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால் பறவைகள் நீர் ஆவியாதலின் மூலமே உடல் வெப்பத்தை குறைத்துக்கொள்ளும். நீர் இழப்பு கோடை காலத்தில் இன்னும் அதிகமாகும். அளவில் பெரிய பறவைகளை விட அளவில் சிறிய பறவைகளே அதிக நீர் இழப்புக்கு ஆட்படுகின்றன (surface area to volume ratio). நீர் இழப்பால் (dehydration), பறவைகள் சோர்வடையும், மயங்கி விழும், இறக்கக்ககூட நேரலாம். நீர் இழப்பை ஈடு செய்ய பறவைகள் நீர் குடிக்கும், நீரில் குளித்து சிறகுகளை நனைத்துக்கொள்ளும்.

நீரில் குளிப்பது தன் சிறகுகளில் உள்ள தூசுகள், அழுக்குகள் நீக்கவும் சீராக பராமரிக்க உதவும். தன் அலகுகளால் சிறகுகளைக் கோதி விட்டுக்கொள்ளும் போது எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வரும் திரவம் சீராக பரவச் செய்து சிறகுகளின் நீரில் நனையாத தன்மையைக் காக்கும்.


அலகை தண்ணீரில் முக்கி மேலே தூக்கிக் குடிக்கும்
அமெரிக்க ராபின்கள் 
பறவைகள் இரண்டு முறைகளில் நீர் குடிக்கும். கோழிகள் தண்ணீர் குடிக்கும்போது அலகைத் தண்ணீருக்குள் மூழ்கியபின் தலையை மேலே தூக்கிக் குடிக்கும். புறா வம்சத்தைச் சேர்ந்த பறவைகள் மாடுகள், குதிரைகள் போல நீர் குடிப்பது போல அலகைத் தண்ணீருக்குள் வைத்து உறிஞ்சிக் குடிக்கும். மணற்கோழிகள் (sand grous) காலையும் மாலையும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தாகம் தீர்த்துக்கொள்ள ஒரு குறிப்பிட்ட குட்டைக்கு நாலா புறங்களிளிருதும் பறந்து வந்து நீர் பருகும். மணற்கோழிகளில் ஆண் பறவைகள் நீர் அருந்திவிட்டு தன் வயிற்றுச் சிறகுகளை நீரில் நனைத்துச் செல்லும். நீர்நிலைக்கு பறந்து வர முடியாமல் கூட்டில் இருக்கும் சிறு குஞ்சுகள் ஆண் பறவையின் வயிற்றை நக்கிக் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். கூழைக்கடா (pelican) பறவைகள் தன் பெரிய அலகை திறந்து வைத்துக்கொண்டு மழை நீரைக் குடிக்கும். மிகச் சிறிய சிட்டுகள், இலைகளில் நிற்கும் பனிதுளிகளைக் குடிக்கும். பொதுவாக அனைத்து பறவைகளும் நல்ல நீரையே குடிக்கும். கடல்காகங்கள் (sea gulls) மட்டும் உவர்ப்பான கடல் நீரைக் குடிக்கும். தேன்சிட்டுக்கள் (humming bird) உணவே பூக்களில் உள்ள இனிப்பான திரவம்தான். நீர் கிண்ணங்கள் வைப்பது போல தேன் சிட்டுகளுக்கு இனிப்பு நீர் கிண்ணங்களில் வைப்பது உண்டு.

 
ஆண் மணற்கோழியின் வயிற்றுச் சிறகை நக்கி
நீர் அருந்தும் குஞ்சுகள்
 
பழங்கள், பூச்சிகள் மற்றும் ஊண் உண்ணும் பறவைகளுக்கு தேவையான பெரும்பகுதி நீர் அதன் உணவிலிருந்தே கிடைக்கிறது. கொட்டைகள், தானியங்கள் உண்ணும் பறவைகளுக்கு நீர் அதிகம் தேவைப்படுகிறது. பறவைகளின் சிறுநீரகத்தின் முக்கிய வேலையே நைட்ரோஜன் கழிவுகளை பிரித்து தாது உப்புக்களை சமநிலையில் வைத்து (சிறு)நீரை சிறிய அளவில் வெளியேற்றுவதே ஆகும். சிறுநீரின் யூரிக் அமிலத்தை வெளியேற்ற பறவைகள் அதிக சக்தியை செலவிட வேண்டியுள்ளது. கோடை காலங்களில் கட்டிடங்களில் மேலுள்ள நீர்த்தொட்டிகளில் பறவைகள் விழுந்து இறந்துவிடுவதை கவனித்திருக்கலாம். அவையெல்லாம் தண்ணீருக்காக தேடி அலைந்து தொட்டியில் உள்ளே நுழைந்து இருக்கும். வெளியே வர முடியாமல் இறந்திருக்கும்.


      

பறந்த வண்ணம் தேன் உறிஞ்சும் தேன்சிட்டு 
தன் நீண்ட நாவினால் நீர் உறிஞ்சும் தேன்சிட்டு 


பறவைகளுக்கு குறிப்பாக காகங்களுக்கு அன்றாடம் உணவு வைக்கும் மதப்பழக்கம் நம்நாட்டில் உண்டு. ஆனால் தண்ணீர் வைக்கும் பழக்கமில்லை. நகரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே பறவைகளுக்கு ஒரு கிண்ணத்தில் நீர் வைக்கலாம். அதை இரண்டு நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்து புது நீர் ஊற்றி வைத்தால் எந்த வித நோய்க்கிருமிகள், லார்வா மற்றும்  கொசு வளர்ச்சியைத் தடுக்கும்.  நகர வாசிகள் கோடைக் காலத்திலாவது கிண்ணங்களில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகத்தைத் தணிக்கலாம்.

குறிப்புகள்:
  1. ஸலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி, “பறவை உலகம்”, நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, https://archive.org/details/CommonBirdsTamil
  2. ரெய்ச்சல் கார்சன், தமிழில் பேரா. சா. வின்சென்ட், மௌன வசந்தம், எதிர் வெளியீடு, ISBN-13 9788192868080
  3. http://www.rspb.org.uk/makeahomeforwildlife/advice/helpingbirds/water/
  4. http://web.stanford.edu/group/stanfordbirds/text/essays/Drinking.html

photo credits
1. http://indianbirdsphotography.blogspot.in/2010/04/delhibirdpix-male-chestnut-bellied.html 
2. http://www.poweredbybirds.com/synchronized-drinking-team/ 
3. http://besgroup.org/wp-content/uploads/KfisherWT-nesting-hole-AmarSingh.jpg
4. http://imgarcade.com/1/flamingo-nest/
5. http://d3u5xmnnxiuz0w.cloudfront.net/wp-content/uploads/2015/01/how-animals-drink-their-water-62557.gif
6. http://d3u5xmnnxiuz0w.cloudfront.net/wp-content/uploads/2015/01/how-animals-drink-their-water-62557.gif
7. http://www.learner.org/jnorth/images/graphics/humm/RThompson_forktongue.gif



தாதூண் பறவை : தேன் சிட்டு,  தாது - பூவில் இருக்கும் தேன் - உண்ணும் பறவை 
அகநானூற்றுப் பாடல் வரிகள் 
"தாதூண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நாஆர்த்த மாண்வினைத் தேரன்"
மணிகள் ஒலிக்க வேகவேகமாகத் தேரோட்டி வந்தபோது, மணியோசையில் சிறு பறவைகள் பதறித் திரிவதைப் பார்த்து மனம் வெதும்பி, மணியின் நாக்குகளைக் கட்டச் சொன்ன தலைவனைக் குறித்த பாடல். 


Monday, February 10, 2014

மாடித் தோட்டமும் நகர மக்களும்


கி.பி. 1600 களில் 60 கோடியாக இருந்த உலக  மக்கள்தொகை அடுத்த 400 ஆண்டுகளில் 700 கோடி உயர்ந்தது. ஒவ்வொரு எழுபது ஆண்டுகளிலும் மக்கள் தொகை இரண்டு மடங்கானது. இதே நிலையில் போனால் 2050 இல் உலக மக்கள் தொகை ஐநா கணிப்பின்படி 915 கோடி ஆகும். நம் பூமியின் தாங்கும் அளவு என்ன? எத்தனை பேர் வாழ இந்த பூமியில் வளங்கள் உள்ளன? மக்கள் தொகை உயர்ந்ததோ மடங்குகளில். அதே அளவு வளங்கள் உயர்ந்ததா என்றால் இல்லை. உணவு உற்பத்தியை ஒரு அளவு வரை படிப்படியாக உயர்த்த முடிந்தது, இன்னும் இன்னும் உயர்த்திக் கொண்டே போவது சாத்தியமற்ற ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும்.



உணவு உற்பத்தியை மேற்கொள்பவர்களின் துயரங்கள் (நம் நாட்டு அரசியல் கொள்கைகளால்) அவர்களின் அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில், உணவு உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் தடுத்துவிடுகிறது. விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடன் பட்டதால் உழைப்புக்கு உணவு தரும் அட்சய பாத்திரமான  நிலங்களையும் விற்றுவிட்டு வேறு தொழில் தேடி தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நேரடியாக விவசாயம் செய்யும் மக்கள்தொகையில் 2035 பேர் குறைந்துகொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 53% பேர் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால் 8% பேர் மட்டுமே நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுவோர். மற்ற அனைவருமே விவசாயக் கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர்.   விவசாயம் செய்வோரும், விவசாய நிலங்களும் குறையும் போது உணவு உற்பத்தி எப்படி அதிகரிக்கும்? கிராமங்களில் விவசாயம் செய்வோர் இல்லை. முதியோர்களும் சிறார்களுமே உள்ளனர். விவசாயியின் இடத்தை ஈடு செய்வது யார்? வீட்டுமனையாக அல்லது தொழிற்சாலையாக மாற்றுபவர்களா? அந்த இடத்தில் விளைந்துகொண்டிருந்த உணவுக்கு எங்கே போவது?

இந்திய வேளாண்துறை  2010-11 வரையான பத்து ஆண்டுகளில் 0.8% பயிர் செய்யும் நிலம் மட்டுமே குறைந்ததாக தெரிவிக்கிறது. மற்ற அனைத்து கணக்கீட்டின்படியும் விவசாய நிலம் இன்னும் பல மடங்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுமனைகளுக்காக வாங்கப்பட்டு உற்பத்தி எதுவும் இல்லாமல் வெற்று நிலங்களாக ஒன்றுக்கும் உதவாமல் வீணடிக்கப்படும் நிலங்களைப் பற்றிய புள்ளி விவரம் இல்லை. இயற்கையின் ஆற்றலை இப்படியெல்லாம் நாம் வீணடித்துக்கொண்டிருக்கிறோம். நகரத்தில் வாழும் நாமெல்லாம் உணவுக்கு எங்கே போவது? ஐநா உணவுகழகத் (FAO) தகவலின்படி மொத்த உலக உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. இதனால், 750 பில்லியன் டாலர் ஒரு வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உணவு தானியங்கள் 17,546 டன் இந்திய உணவு கார்ப்பரேஷன் (FCI) கிடங்குகளில் 2009-10 முதல் ஜூலை 2012 சேதமடைந்துள்ளன. இதுபோன்ற இக்கட்டான சூழலில் உணவு உற்பத்தியின் அளவை அதிகப் படுத்துவது எப்படி என்பது நாம் சந்திக்கும் கேள்வி. சவால் என்பது இன்னும் பொருத்தம்.



 மால்தூசியன்கோட்பாட்டின்படி உற்பத்தியாகும் உணவு அளவைத் தாண்டி மக்கள்தொகை அதிகரிக்கும் போது  நேரடியாகவும் பல்வேறு மறைமுக  காரணங்களாலும் அதிவேகமாக சரியும். இக்கணிப்பு பலிக்குமா என்று தெரியாது. ஆனால் இவ்வுலகத்தால் அளவுக்கு மீறிய மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.

உலக மக்கள்தொகைக்கு யாரால் உணவை அளிக்க முடியும்? உங்கள் வீட்டு மக்கள்தொகைக்கு தேவையான உணவை நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.
தனக்குத் தேவையான காய்கறிகளை, கீரைகளை நகரத்தில் உள்ளவர்கள் தங்கள் மாடியில், பால்கனியில், வீட்டு ஓரங்களில், வீட்டு முகப்பில், காலியான மண் நிலம் கூட தேவையில்லை வீணாகும் காலி பாட்டில்கள், அட்டைப்பெட்டிகள், ஏன் பிவிசி பைப்புகளில் கூட துளையிட்டு செடிகள் வளர்க்கலாம். மிகக் குறைந்த இடத்திலேயே பல வழிகளிலும் காய்கறிச் செடி வளர்க்கலாம். செலவும் குறைவுதான். இதனால் நகரத்திலும் உணவு உற்பத்தி செய்யப்படும்.
 
நான்கு சதுர அடியில் 50 செடிகள் வளர்க்க முடியும். தேவையான காய்கறிகளை விளைவிக்க முடியும். 60 சதுர அடியில் சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, தக்காளி, பச்சைமிளகாய், வெண்டைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், புடலை, பீர்க்கன், பாகற்காய், கொத்தமல்ல்லி போன்ற எல்லாம் வளர்க்கலாம். பூச்சி வந்தால் இஞ்சி பூண்டு அரைத்து தெளிக்கலாம். மஞ்சள் நீர் தெளிக்கலாம். ஒரு சில பூச்சிககள் ஒரு குறிப்பிட்ட செடியை மட்டுமே தாக்கும். ஒன்றும் செய்யாமல் அச்செடியை பூச்சி diversion ஆக விட்டுவிடலாம். மற்ற செடிகளுக்கு பாதிப்பிருக்கது. உரமாக சமையலரறைக் கழிவுகள், ** (**நகரமென்பதால்  கால்நடைக் கழிவை குறிப்பிடவில்லை). மோர் கரைத்து தெளிக்கலாம், அதில் லேக்டோ பசில்லஸ் நுண்ணுயிரிகள் செடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. துளசி செடி பூச்சியைக் கட்டுப்படுத்தும். நீர் செலவு அதிகமில்லை. காய்கறி மற்றும் அரிசி கழுவும் நீர் மட்டும் போதும்.

 
மண் தயாரிப்பு – மண், காய்ந்த இலைச் சருகுகள், எரு, தண்ணீரில் கரைத்த ** , தேங்காய் நார், மரத்தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இவற்றில் ஒன்றிரண்டு இல்லையென்றாலும் மண் மட்டும் இருந்தால் கூட போதும். தேங்காய் நாரும், மரத்தூளும் அதிக ஈரத்தை தக்க வைக்கும். ஒவ்வொரு  வாட்டர் கேனையும் வெட்டி துளையிட்டு விதைநிலமாக்கலாம். தண்ணீர் தெளித்து விரலால் அழுத்தி விதையின் அளவில் மூன்று மடங்கு குழி செய்து ஊன்றினால் போதும். விதைத்த பின் ஒரு விதை முளைக்க நாம் செய்ய வேண்டியது எதுவுமில்லை. சிறு விதைகளை தூவினாலே போதும். எந்த ஒரு ரசாயனமும் கண்டிப்பாக செடிக்கு வேண்டாம். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள்தான் செடிக்குத் தேவையான உணவை மண்ணிலிருந்தும் காற்றிலிருந்தும் பெற்றுத்தருகின்றன. நம் அனைவருக்கும் இயற்கை வேளாண் பேரறிஞர் மசானோபு புகோகா சொன்ன சொல் நம்பிக்கை ஊட்டுகிறது. “இயற்கையாக முளைக்கும் எந்த விதைக்கும் உழுத நிலமும் இரசாயனங்களும் தேவையேயில்லை”. காட்டில் சென்று யார் உரமிட்டார்கள்? பூச்சிகளால் எந்தக் காடாவது அழிந்துள்ளதா? காட்டில் உள்ள தாவரம் போல் செழுமையான தாவரம் எங்காவது உண்டா?

விதை ஓரிரு நாளில் வெளிச்சத்தைப் பார்க்க முளைத்து விடும். மேலும் வளரும். இரண்டு மாதங்களில் உங்கள் சமையலறைக்குள் உங்கள் உணவாக மாறத் தயாராகிவிடும்.

எரு தயார் செய்ய உங்கள் வீட்டு மக்கும் குப்பைகளை, செடிகளின் உதிர்ந்த இலைகளை ஒரு பக்கெட்டில் கொட்டி மண் தூவி மோர் கரைத்து ஊற்றிவந்தால், (**),  போதும். நீர் கசியும் என்று தோன்றினால் கீழே பழைய ப்ளெக்ஸ் பேனர் விரித்துவிடலாம்.

விதைகளை விவசாய நண்பர்களிடமும், தமிழ்நாடு தோட்டக் கலைத்துறை மையங்களிளிலும்   நர்சரிகளிலும் வாங்கிக்கொள்ளலாம். அண்மையில் கூட தமிழ்நாடு அரசு நகரங்களில் (சென்னை, கோவை மாவட்டங்கள்) மாடித்தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவிக்க தேவையான விதைகள், இடுபொருள்கள் மற்றும் அனைத்துகருவிகளும் ஐம்பது சதவிகித மானியத்தில் அளித்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. நகரங்களில் பலர் தமது வீடுகளில் என்று மாடித் தோட்டங்கள் அமைக்க ஆரம்பித்து விட்டனர்.

உங்கள் வீடு பசுமை வீடாகும். பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் உங்கள் வீட்டை நந்தவனமாக்கும். உங்கள் வீட்டில் விளையும் காய்கறியை விட யாராலும் நஞ்சில்லாத பசுமையான காய்கறியை தந்துவிட முடியாது. எங்கோ தூரத்திலிருந்து எரிபொருளை எரித்து காற்றை மாசுபடுத்திக்கொண்டு லாரியில் வரும் காய்கறி வேண்டாம். உங்கள் வீட்டு காய்கறித் தோட்டம் உங்கள் carbonfootprintஐக் குறைக்கும்.



விவசாய நிலங்கள் இல்லாத சென்னையில் காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது என்று இன்னும் சில ஆண்டுகளில் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கப்பட வாய்ப்புண்டு. அதில் என் பங்கும் உங்கள் பங்கும் இருக்கும் என நம்புகிறேன்.

Sunday, June 27, 2010

பறவை

-->மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் V வடிவத்தில் கூட்டமாய், விசிலடித்து தனிமையாய், மின்சாரக் கம்பியில் வரிசையாய், வயலோரங்களில், ஏரிக்கரை மரங்களில் சிறகடித்து பறந்த பல்வேறு வகையான பறவைகளை பார்த்து ரசித்து விட்டு மீண்டும் அந்த நினைவுகளில் மூழ்க இதோ இப்போது எழுத ஆரம்பித்து விட்டேன் பறவைகளுக்காக.

ஒரு குழந்தைக்கு மட்டுமல்ல பறவை ஆச்சரியமான உயிரினம். பறப்பதற்கு ஆசைப்படாத மனிதனில்லை. நம் கதைகளில் குதிரை, பெண் தேவதைகள், சூப்பர்மேன், ஏமாந்தால் எருமை கூடப் பறக்கும். பறவையைப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் இறக்கை கட்டிக் கொண்டு வானத்தில் பறக்கலாம் என்று கற்பனை செய்யும்.

நாம் பார்த்து பெயர் தெரியாத பறவைகள் உள்ளதா? யோசித்து பாருங்கள்...
வால் நீளமாக, அலகு கூர்மையாக, வளைந்து, திக்கித் திக்கி கத்திக் கொண்டு, உடலிலே வண்ணம் வேறாக,.... இப்படி எத்தனையோ.
சரி, நமக்கு தெரிந்த பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுவோம். காகம், குருவி, வாத்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, மைனா, கழுகு, குயில், மயி
ல், தேன் சிட்டு, கிளி, லவ் பேர்ட்ஸ், உள்ளான், காடை, கௌதாரி, ஆந்தை, புறா, பருந்து, பெங்குயின், சேவல், கோழி, வான்கோழி, நீர்கொழி, நெருப்புக்கோழி, நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி.

இதுவரை வகைப்படுத்தப்பட்ட பறவை இனங்கள்
9000 திற்கும் மேல். இன்னும் அறியப்படாத பறவை இனங்களும் இருக்கலாம். பறவைகளுக்கு பெறும்பாலும் dayshift தான். ஆந்தை போன்ற சில பறவைகளைத் தவிர. ஆகவே பறவைகளைக் கண்காணிப்பது எளிது. உலகம் முழுக்க பறவை ஆர்வலர்கள் பறவைகளைக் கண்காணித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பறவையினம் இல்லாத இடமே உலகில் இல்லை எனலாம். துருவப் பிரதேசங்களிலும் வெப்ப பிரதேசங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. பறவைகள் உணவு பெரும்பாலும் அசைவமே. பூச்சிகள், புழுக்கள், எலி போன்ற சிறு பிராணிகள்,
இறந்து போன உயிரினங்கள், மீன்கள், கடல் உயிரினங்கள், பாம்புகள். அதனதன் வாழுமிடத்திற்கேற்ப மாறுபடுகிறது. சைவ மெனுவில் பழங்கள், கொட்டைகள், காய்கள், தானியங்கள் எல்லாம் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மூலம் காடுகளையே உருவாக்கலாம். பறவைகள் பழங்களை உண்டு அதன் எச்சத்தில் கொட்டைகளை வெளியேற்றிவிடும். நிறைய பழ மரங்களை வளர்த்து பறவைகள் உதவியோடு. காடுகள் வளர்ப்பதிலும், விவசாயத்திலும் பறவைகளின் உதவி குறிப்பிடத்தகுந்தது. பயிர்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பதற்கு பறவைகளைப் பயன்படுத்துவது இயற்கை விவசாய முறை. பயிருக்கு கெடுதல் ஏற்படுத்தும் பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகிவிடும்.

பறப்பதற்கு ஏற்றவாறு பறவைகளின் உடல் எடை மிக லேசானது. அதன் இறக்கை எலும்புகளில் காற்று பைகள் இருக்கிறது. மேலும் பறவைகளால் நம்மைப் போல் அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டால் பறக்க முடியாது. ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை சாப்பிடுவது அவசியமாகிறது.

மனிதர்களின் செயல்பாடுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கப்படும் உயிரினங்களில் பறவைகளும் அடங்கும். அழிந்து போன பறவையினங்கள் எத்தனையோ. மனித செயல்பாடுகளுக்கும், நகர வாழ்க்கைக்கும் பழக்கிக் கொண்ட பறவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. காடுகளின் ஆக்கிரமிப்புகளால் வாழ்விடம் இழந்து அழிந்து போன பறவையினங்கள் வேட்டையாடி அழிக்கப்பட்ட பறவைகளை விட அதிகம். நகரங்களின் குப்பைகளில் இரைதேடும் பறவைகளின் ஆயுள் குறைவதும், இனப்பெருக்கம் குறைவதும் ஆய்வுகள் சொல்லும் செய்தி, கண்கூடு. சுமார் பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த பல பறவைகள் இப்போது பார்க்க முடியவில்லை. உதாரணம் கருடன் என்று சொல்லப்படும் பறவை. இதற்கு காரணம் நாம் உபயோகப் படுத்தி சரியான முறையில் அப்புறப்படுத்தப் படாத ரசாயனம் மிகுந்த மருத்துவக் கழிவுகள், மாமிச கழிவுகள்.

பொதுவாகவே பறவைகள் பகல்நேரத்தில் செயல்படுபவை. மாலை சூரியன் மறைந்ததும் கூட்டுக்குத் திரும்பும் வாழ்க்கை முறை. நகரங்களில் உள்ள அதிக ஒளியால் அலைக்கழிக்கப்பட்டு பறவைகளின் இயல்பு வாழ்க்கைமுறை மாற்றம் அதன் இனப்பெருக்கத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி விட்டது.

குளிர் காலங்களில் வெப்ப நாடுகளுக்கு வரும் பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர்களை பறந்து கடக்க வேண்டும். கடல் பரப்பின் மேல் பறக்கும் பொது இளைப்பாற இடமும் இல்லை.

இன்று நீங்கள் எத்தனை வகை பறவைகளைப் பார்த்தீர்கள்? தட்டு, கூண்டு, தொலைக்காட்சிக்கு வெளியே.